தனியார் பள்ளிகளுக்கு பாய்ந்த எச்சரிக்கை!

Published On:

| By christopher

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வந்தால் தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனரகம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிந்துள்ளது. இதனையடுத்து இந்த விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வராமல் இருப்பதாக ஒருசில இடங்களில் புகார் எழுந்தது.

இதனையடுத்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், ”மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடவாரியான எண்ணிக்கை விவரம் அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அவ்வெண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாகக் கணக்கிட்டு,

பாடவாரியான / பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றத்தக்க வகையில்,

தங்கள் மாவட்டத்தில் அமையும் மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் பயிற்றுமொழி வாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில் ஆங்கிலம், தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பிட வேண்டும்.

மேலும் மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள தங்களது ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள் / அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் / தனியார் (மெட்ரிக் / ஆங்கிலோ இந்தியன்) பள்ளிகள் அனைத்திலிருந்தும்,

பத்தாம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்க வேண்டும்.

எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும்.

தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும்.

எனவே ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைப் பட்டியலை (Teachers Profile) தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும்.”

என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பசும்பொன், பரமக்குடி: மோடி வருகைக்கு முன்னோட்டமாய் ஆளுநர்?

இந்தியாவில் முதன்முறையாக தண்ணீருக்கு தனி பட்ஜெட்!

திருப்பதி தேவஸ்தானம்: போலி டிக்கெட்டுகள் விற்பனை!

பாரம்பரிய தினம்: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம்!

tamilnadu govt warning
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment