தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குப்படுத்துவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தொழில் நுட்ப வளர்ச்சியால் இணையதள விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதிப்பது அதிகரித்து வருகிறது. அத்தகைய விளையாட்டுகளில் ஒன்று தான் ரம்மி. லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் மக்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஏராளமானோர் தங்களது பணத்தை முதலீடு செய்து பணம் சம்பாதிக்கின்றனர். அதே நேரம் சில நேரங்களில் பணத்தை இழந்தும் வருகின்றனர். ஒருகட்டத்தில் இழந்த பணத்தை திரும்ப பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று விடுகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முன்னாள் நீதிபதி தலைமையில் குழு!
இதனையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திட குழு ஒன்றினை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி அக்குழு ஆன்லைன் ரம்மி குறித்த அறிக்கையை முதல்வரிடம் ஜுன் 27ம் தேதி அளித்தது.
கருத்து தெரிவிக்க கோரிக்கை!
அதன் தொடர்ச்சியாக தற்போது ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர் குறிப்பாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர், மாணவர்கள், இளைஞர்கள், உளவியலாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் போன்றோர் தங்கள் கருத்துகளை வரும் 12ம் தேதிக்குள் homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.
மேலும் ஆன்லைன் விளையாட்டு சேவை நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட அதிகாரியை வரும் 9ம் தேதி மாலை 5 மணிக்கு சந்தித்து கூற வேண்டும் என்றும், வரும் 11ம் தேதி ஆன்லைன் நிறுவனங்களிடம் நேரிடையாக கருத்துகளை கேட்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
புதுக்கோட்டை தேர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
Ban online gambling.