ஜல்லிக்கட்டில் அடுத்தடுத்து உயிரிழப்பு : முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

Published On:

| By christopher

மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இன்று (ஜனவரி 16) உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.

மாட்டு பொங்கலை முன்னிட்டு இன்று மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போடியில் 9 காளைகளை தழுவி 3ம் இடத்திலிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் ராஜ் (24) என்ற மாடுபிடி வீரரை காளை குத்தியதில் படுகாயமடைந்தார்.

அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும், அரவிந்த் ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞரும் வந்திருந்தார். பார்வையாளர் பகுதியில் நின்றிருந்த அவரை ஜல்லிக்கட்டு காளை திடீரென முட்டியதில் படுகாயமடைந்தார்.

உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒரேநாளில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரரும், பார்க்கவந்த பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்ததது ஜல்லிக்கட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இருவரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவு அறிக்கை

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம்‌, பாலமேட்டில்‌ இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்‌ பங்கேற்ற மதுரை மாவட்டம்‌, பாலமேடு கிராமத்தைச்‌ சேர்ந்த திரு.இரா.அரவிந்தராஜ்‌ (வயது 24) த/பெ திரு.இராஜேந்திரன்‌ என்பவரும்‌,

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, திருவெறும்பூர்‌ வட்டம்‌, நவல்பட்டு பகுதி சூரியூர்‌ கிராமத்தில்‌ நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம்‌, களமாவூர்‌ கிராமம்‌, கண்ணகோணன்பட்டியை சேர்ந்த திரு. அரவிந்த்‌ (வயது 25) த/பெ மாரிமுத்து என்பவரும்‌ எதிர்பாராத விதமாக படுகாயம்‌ அடைந்து மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்‌ என்ற துயரச்‌ செய்தியை கேட்டு மிகவும்‌ வேதனை உற்றேன்‌.

இவர்களை இழந்து வாடும்‌ குடும்பத்தினருக்கும்‌, நண்பர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. உயிரிழந்த இருவரின்‌ குடும்பத்தினருக்கும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய்‌ 3 லட்சம்‌ வழங்கவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌.” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

”சூப்பர்ஸ்டாரை விட பெரிய பட்டம் சுப்ரீம் ஸ்டார் தான்” – சரத்குமார் ஆவேசம்

பாலமேடு ஜல்லிக்கட்டு : 23 காளைகளை அடக்கி காரை வென்றார் தமிழரசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share