தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களின் தமிழ் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் நேற்று (நவம்பர் 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை அண்ணா நகரில் வைக்கப்பட்டுள்ள அவ்வை நடராஜன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அவ்வை நடராஜன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில், அவ்வை நடராஜன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணை தலைவராகவும் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளராகவும் அவ்வை நடராஜன் பணியாற்றி உள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்திற்காக அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு 2011-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகவும், பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றி உள்ளார். தமிழுக்காக அவர் ஆற்றிய தொண்டிற்காக கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
நேற்று (நவம்பர் 21) இரவு வடசென்னை தமிழ் சங்கத்தின் சார்பில், ”தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களின் திருவுடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டுகிறோம்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது.
செல்வம்
விநியோக உரிமை: துணிவை தாண்டிய வாரிசு
24 மண்டலங்களாக மாறுகிறது சென்னை மாநகராட்சி!