தமிழகத்தில் 17 ஆவது வனவிலங்கு சரணாலயம்: எங்கு அமைகிறது?
தமிழகத்தில் ஓசூர் அருகே 17 ஆவது வனவிலங்கு சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய சரணாலயம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஓசூர் அருகே 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை ‘காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தமிழகத்தின் 17-வது வனவிலங்கு சரணாலயமாகும்.
தருமபுரி, கிருஷ்ணகிரி என 2 மாவட்டங்களை உள்ளடக்கிய ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவளகிரி, ஊரிகம் உள்ளிட்ட இடங்களை ஒட்டி சரணாலயம் அமைய இருக்கிறது. சரணாலயம் அமைய உள்ள இடத்தில் 35 விலங்கினங்களும், 238 பறவையினங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக ‘காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்’ அமைய உள்ளது.
புதிய சரணாலயம் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் 17வது வனவிலங்கு சரணாலயமாக ‘காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தை’ தமிழக அரசு அறிவித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் பணிகளுடன் இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கை நமது மாநிலத்தின் வளமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் நீண்ட தூரம் செல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கலை.ரா
கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காய விலை: குறைவது எப்போது?
“1 லட்சம் பேருக்கு வேலை”- முதலமைச்சர் பேச்சு!