தன்னாட்சி கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு பொது பாடத்திட்டத்தினை தமிழக உயர்கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.
இந்த பொதுப்பாடத்திட்டத்திற்கு தன்னாட்சி கல்லூரிகள், கல்வி செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தமிழக அரசின் இந்த முடிவு குறித்து உயர் கல்வியில் பொதுபாடத்திட்டம்: அகமும் புறமும் என்ற தலைப்பில் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பொருளியல் துறை தலைவர் நா.மணி, புதுச்சேரி பல்கலைக்கழக பொருளியல் துறை இணைப்பேராசிரியர் வே.சிவசங்கர் ஆகியோர் மின்னம்பலத்தில் எழுதிய கட்டுரைகளை இரண்டு பாகங்களாக வெளியிட்டிருந்தோம்.
அதில் உயர் கல்வியில் பொதுபாடத்திட்டம் கொண்டு வருவதால் ஏற்படும் சிக்கல்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்திருந்தார்கள்.
இந்தநிலையில் தன்னாட்சி கல்லூரிகளில் பொது பாடத்திட்டத்தை அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 26-08-2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி,
மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும் தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும்,
அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் உயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொது பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநிலத்திலுள்ள 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் பொதுப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பொதுப் பாடத்திட்டத்தின் நோக்கத்தினை விளக்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் 02.08.2023 அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், இந்த புதிய பொது பாடத்திட்டம் 70 சதவீத தன்னாட்சிக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
சில தன்னாட்சிக் கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த பொது பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
தன்னாட்சிக் கல்லூரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன.
இதன்படி, தன்னாட்சிக் கல்லூரிகள் இந்த புதிய பொது பாடத்திட்டத்தினை தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
திருச்சி என்ஐடி நேரடி பணி நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!