கிச்சன் கீர்த்தனா : புளியோதரை
கோயில் பிரசாதங்களில் புளியோதரைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. சுட சுட , மணக்க மணக்க இருக்கும் புளியோதரையை கண்டிப்பாக இன்னொரு முறை வாங்கி சாப்பிடலாம் என்று தான் பலரும் நினைப்பார்கள்.
பெருமாள் கோயில்களில் கொடுக்கப்படும் ஸ்பெஷல் பிரசாதமான புளியோதரையை நீங்களும் செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பச்சரிசி சாதம் – 1 கிலோ
நல்லெண்ணெய் – 50 மில்லி
மிளகு – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
புளிக்காய்ச்சல் செய்ய…
புளி – 100 கிராம் (தண்ணீரில் ஊற வைக்கவும்)
நல்லெண்ணெய் – 100 மில்லி
கடலைப்பருப்பு – 50 கிராம்
உளுத்தம்பருப்பு – 50 கிராம்
வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – முக்கால் டீஸ்பூன்
முந்திரி – 50 கிராம் (இரண்டாக உடைக்கவும்)
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புளிக் கரைசலை வடிகட்டிக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.
இதில் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, முந்திரி சேர்த்து, மிதமான தீயில் பாதியாக வற்றவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்.
இந்தப் புளிக்காய்ச்சலை அப்படியே மூடிவைத்து, மறுநாள் பயன்படுத்த வேண்டும். மிளகை மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி செய்து, நல்லெண்ணெயில் சேர்த்துக் கலக்கவும். உப்பு கலந்து வடித்த சூடான சாதத்தில் புளிக்காய்ச்சல், நல்லெண்ணெயில் கலக்கிய மிளகைச் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.