சண்டே ஸ்பெஷல்: ஹோட்டல் உணவுகள் சாப்பிட்டால் அல்சர் வருமா?

Published On:

| By christopher

தற்போது விடுமுறை தினங்களில் உணவகங்களில் சாப்பிடுவது அதிகரித்து வரும் நிலையில் வயிற்றில் கோளாறு ஏற்படும்போது வெளியே சாப்பிட்டதுதான் காரணம் என்கிறார்கள் பலர். இந்த வயிற்று உபாதை தொடரும்போது அல்சராக இருக்குமோ என்று அச்சப்படுகிறார்கள் சிலர். இது உண்மையா? அல்சர் ஏற்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்னென்ன?

“அடிக்கடி ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுவதால் அல்சர் ஏற்படலாம் என்ற நம்பிக்கை தவறானது. ஹோட்டலில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படும்போது அதைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படலாம். ஆனால், வயிற்றுப் பிரச்சினை என்றாலே அல்சர் என்று நினைத்துவிடக் கூடாது. மேலும் அல்சர் என்கிற வயிற்றுப்புண், பொதுவாக யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடியது.

அல்சர் ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய தவறான நம்பிக்கைகள் நம்மிடையே நிலவுகின்றன. நேரத்துக்குச் சாப்பிடாமல் விட்டால் வயிற்றில் அமிலம் சுரந்து அது இரைப்பை சுவர்களைப் புண்ணாக்கி அல்சர் ஏற்படும் என்றும், காரமான உணவுகளை சாப்பிட்டால் அல்சர் வரும் என்றும், இன்னும் சில நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

மருத்துவ அறிவியல் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் இன்றைய சூழலில் அல்சர் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் விகிதம் குறைந்திருக்கிறது. அப்படியே அல்சர் வந்தாலும், அதற்கு பயப்படத் தேவையில்லை. அல்சரை மிக எளிதில் குணமாக்க முடியும். என்ன இருந்தாலும் வராமல் தற்காத்துக் கொள்வதுதான் நல்லது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அல்சர் வந்துவிடும் என பயப்படுகிறார்கள் சிலர். வட இந்தியாவில் ரொட்டி, சாப்பாடு, சமோசா என்று எதை சாப்பிட்டாலும் பச்சை மிளகாயை எடுத்துக் கடித்துக்கொண்டு சாப்பிடுவார்கள். உண்மையில் காரமான உணவுகளைச் சாப்பிடுவது இரைப்பைக்கும் உடல்நலத்துக்கும் உகந்தது. வயிற்றுப்புண் வந்து விடுமோ என்கிற பயம் தேவையற்றது.

சாப்பிடாமல் விட்டாலோ, நேரம் கடந்து சாப்பிட்டாலோ வயிற்றில் அமிலம் அரித்து அல்சர் வரும் என்பதும் தவறான நம்பிக்கை. வயிற்றில் செரிமானத்துக்காக சுரக்கும் அமிலத்தைத் தாங்கும் திறன் நம் இரைப்பைக்கு இருக்கிறது. ஆகவே, சாப்பிடாமல் இருந்தால் அல்சர் வராது, அசிடிட்டிதான் வரும்.

நேரம் கடந்து சாப்பிடுகையில் வயிற்றில் வழக்கத்துக்கும் அதிகமாக அமிலம் சுரந்து அது சாப்பிட்ட பிறகு இரைப்பையின் மேற்பகுதியில் வந்து தங்கும்போதுதான் அசிடிட்டி ஏற்படுகிறது. சில வேளைகளில் அந்த அமிலம் உணவுக்குழாய் வழியாக மேலே வந்து எரிச்சலை ஏற்படுத்தலாம். இதுதான் அசிடிட்டியின் விளைவுகள்.

அடிக்கடி ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அல்சர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகலாம் என்கிற நம்பிக்கையும் தவறானது. ஹோட்டலில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படும்போது அதைச் சாப்பிடுகையில் ஃபுட் பாய்சன் ஏற்படலாம். இதன் காரணமாக வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். வயிற்றுப் பிரச்சினை என்றாலே அல்சர் என்று நினைத்துவிடக் கூடாது. பித்தப்பையில் கல் இருந்தால் பித்தம் சரியான அளவில் சுரக்காமல் போகும். இதனால்கூட வயிற்றுவலி ஏற்படலாம்.

அப்படியென்றால் எதனால்தான் அல்சர் ஏற்படுகிறது என்றால், இரண்டே காரணங்கள்தான். H.pylori என்கிற பாக்டீரியா தொற்றுதான் அல்சர் ஏற்பட முதன்மைக் காரணம். NSAID (Nonsteroidal anti inflammatory drugs)… அதாவது, காய்ச்சல் மற்றும் வலிகளுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால் அல்சர் ஏற்படும். மருத்துவர் பரிந்துரையில்லாமல் நாமாகவே மருந்தகத்துக்குச் சென்று மாத்திரை வாங்கி சாப்பிடும் சுய மருத்துவத்தின் விளைவு இது. இவை இரண்டும்தான் நேரடியான காரணங்கள்.

புகைபிடித்தல், தினசரி மது அருந்துதல், சாப்பிடாமல் தவிர்த்தல் ஆகியவை அல்சரை மறைமுகமாகத் தூண்டக்கூடியது. முழு நேரம் மது அருந்தக்கூடிய குடி நோயாளிகளுக்கு அல்சர் வர வாய்ப்பிருக்கிறது என்று சொல்ல முடியுமே தவிர அல்சர் வரும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அல்சர் ஒரு பாக்டீரியா தொற்று என்பதைப் புரிந்துகொண்டாலே போதும்.

ஒருவருக்கு அல்சர் இருப்பதை எண்டோஸ்கோபி செய்து பார்ப்பது, பயாப்சி எடுத்து ஆய்வு செய்வது மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம். அப்படியாக அல்சர் கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுதல், ஜங்க் உணவுகளைத் தவிர்த்தல், தேவையான அளவு தண்ணீர் குடித்தல், நன்றாகத் தூங்குதல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே, அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாத் தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடியும். மருத்துவப் பரிந்துரையின்றி எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் இருப்பதும் முக்கியம். அதே நேரத்தில் சுகாதாரமற்ற ஹோட்டல் உணவுகளைத் தவிர்ப்பது மிக அவசியம்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

அங்க ஒரு ஆயிரம் இங்க ஒரு ஆயிரம்: அப்டேட் குமாரு

கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்: ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share