சண்டே ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யப்படும் பனீர் ஆரோக்கியமானதா?

Published On:

| By christopher

பாலைக் காய்ச்சி பொங்கும்போது எலுமிச்சைப் பழச்சாறு பிழிந்து திரியவைத்து வீட்டிலேயே பனீர் தயாரிக்கிறார்கள். இந்த முறை சரியானதா…

இந்த பனீர் ஆரோக்கியமானதா? இப்படித் தயாரிக்கப்படும் பனீரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? – பல இல்லத்தரசிகளின் கேள்வி இது. இதற்கான பதில் என்ன?
“பசும்பால் – எருமைப்பால் அல்லது பாக்கெட் பாலைக் காய்ச்சி  அதில் எலுமிச்சைப்பழச் சாறோ, வினிகரோ சேர்த்துத் திரியவைத்து வீட்டிலேயே பனீர் தயாரிக்கிறார்கள். இது சரியான முறைதான். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பாலைத் திரித்து பனீராக மாறியதும் அதை எவ்வளவு நேரத்துக்கு அழுத்தி வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து அது மிக மென்மையாகவோ, மிதமான மென்மைத்தன்மையுடனோ அல்லது கடினமாகவோ வரும்.

பனீர் புரதச் சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. தவிர அது எந்த மாதிரியான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் கொழுப்பு அளவும் வேறுபடும்.

பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.

எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் பனீர் மிகச் சிறந்த உணவு. பனீரை கிரேவி, புலாவ், டிக்கா, புர்ஜி என விதம் விதமாகச் சமைக்க முடியும் என்பதால் குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் செய்து தந்து அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கும் பனீர் நல்லது.

இத்தனை நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் பால் அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் பனீரை தவிர்ப்பது நல்லது. மருத்துவ ஆலோசனையோடு மட்டுமே பனீரை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share