கோடை வெப்பம்: பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுமா?

தமிழகம்

வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோடை வெப்பம் மக்களை வாட்டி வருகிறது. பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகிறது. நேற்று வேலூர் – 101.48 டிகிரி பாரன்ஹீட், கரூர் பரமத்தி – 101.30 டிகிரி பாரன்ஹீட், திருச்சி – 101.30 டிகிரி பாரன்ஹீட், மதுரை – 101.12 டிகிரி பாரன்ஹீட், ஈரோடு – 100.76 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும், கடந்த ஆண்டுகளை காட்டிலும் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தசூழலில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (மே 23) தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளன.
அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 2வது வாரத்திற்குப் பிறகு தான் திறக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே விடுமுறை அளித்து ஜுன் முதல் நாளிலேயே திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும்.
கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரியா

முதலீட்டை ஈர்க்கவா? முதலீடு செய்யவா?: மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி!

ரூ.2000 நோட்டுகள் வாபஸ்: வங்கிகளில் கூட்டமில்லை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *