பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று (டிசம்பர் 28) அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கரும்பு வழங்காததை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 2ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதுபோன்று, பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரும்பு வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கரும்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்கத்துடன் முழு கரும்பு ஒன்றையும் சேர்த்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 9ஆம் தேதி அன்று முதல்வர் தொடங்கி வைப்பார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி ஜனவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
Comments are closed.