சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நேற்று (ஆகஸ்ட் 21) இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன்தாங்கல், பட்டாபிராம், செம்பரம்பாக்கம், அடையாறு, நந்தனம், ஆலந்தூர், மாம்பலம், கோடம்பாக்கம், வடபழனி, சென்ட்ரல், புரசைவாக்கம், ஓட்டேரி, பெசன்ட் நகர், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு சுமார் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
மின் சேவை துண்டிப்பு!
மழையுடன் சேர்ந்து பல இடங்களில் சூறைக்காற்றும் வீசியதால், 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் இரவில் தூங்க முடியாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளாயினர்.

விமான சேவை பாதிப்பு!
மேலும் கனமழை காரணமாக சென்னை விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. நேற்றிரவு சென்னைக்கு வந்த துபாய், பக்ரைன், ஹாங்காங், மும்பை மற்று லக்னோ விமானங்கள் என மொத்தம் 5 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்ற விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டு சென்றன.
பிற மாவட்டங்களிலும் கனமழை!
நேற்றிரவு சென்னை மட்டுமின்றி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர் என பலமாவட்டங்களிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா