கடந்த மூன்று வாரங்களாக கொத்தமல்லிக்குக் கட்டுபடியான விலை கிடைக்காததால் கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுத்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள், கீரை வகைகள் சாகுபடி செய்ய சிறப்பு மானியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் மலைப் பிரதேசங்களைப்போல் ஆண்டு முழுவதிலும் குளிராக இருப்பதால், இந்தப் பகுதிகளில், 1,200 ஏக்கர் வரையில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
இது தவிர, புதினா, பசலைக்கீரை உள்பட பல கீரை வகைகள், 900 ஏக்கர் வரையில் சாகுபடியாகிறது.
இங்கு அறுவடையாகும் கொத்தமல்லி, புதினா மற்றும் இதர கீரை வகைகள் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
கடந்த, நவம்பர் தொடக்கத்தில் பெய்த மழையால், நிலத்தை தயார் செய்து டிசம்பர் மாதத்தில் அதிகப்படியான விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்திருந்தனர்.
தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், கடந்த மூன்று வாரங்களாக கொத்தமல்லிக்குக் கட்டுபடியான விலை கிடைக்காமல், விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
விதைப்பு முதல் அறுவடைப் பருவம் வரையில் செய்த செலவு தொகை கூட கிடைக்காத வகையில் விலை குறைந்துள்ளதால், பலரும் கூலி கொடுத்து அறுவடை கூட செய்ய முடியாமல், கால்நடைகளுக்கு தீவனமாக அப்படியே விட்டுள்ளதுடன்,
பலரும் அறுவடைப்பருவத்திலுள்ள கொத்தமல்லியை உழவு செய்து அடியுரமாக மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், “கொத்தமல்லி, புதினான்னு எந்த கீரை வகை சாகுபடி செய்தாலும், தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு எந்த ஒரு மானியமும் கொடுப்பதில்லை.
தமிழக அரசு விவசாயிகளுக்கு கீரை வகைகள் சாகுபடி செய்ய மானியம் கொடுத்தால், ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும், நஷ்டமும் குறையும்’’ என்று தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்!
கிச்சன் கீர்த்தனா: தினமும் அசைவ உணவுகள் சாப்பிடுவது நல்லதா?