கோவையில் ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடியை மாணவி ஸ்ரீமதியின் தாயார் சந்திக்கவுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியமூர், சக்தி மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 2022 ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என பெற்றோர்கள் குற்றம்சாட்டி வந்தனர். தங்கள் பிள்ளைக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஜூலை 17அன்று வன்முறையாக வெடித்தது.
தொடர்ந்து மாணவியின் உடல் இரு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி இறந்து 10 நாட்களுக்குப் பிறகு ஜூலை 22ஆம் தேதிதான் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. ‘மாணவியின் மரணம் தற்கொலைதான்… கொலைக்கான எந்தவிதமான முகாந்திரமோ, தடயமோ இல்லை’ என ஸ்ரீமதி சந்தேக மரண வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் மாணவி கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறி பள்ளி நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தனது மகள் மரணமடைந்து 19 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில்… இன்று(மார்ச் 18) கோவை வந்துள்ள பிரதமர் மோடியை சந்தித்து ஸ்ரீமதி வழக்கில் சிபிசிஐடி மீண்டும் உரிய விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டி கோரிக்கை மனு அளிக்கவுள்ளார்.
தற்போது பிரதமர் மோடி வாகனப்பேரணியில், பொதுமக்களை சந்தித்து வருகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் பிரதமர் மோடியை சந்திக்க ஸ்ரீமதி தாயார் காத்திருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி, பிரியா