Strike to stop textile production

ஜவுளி உற்பத்தி நிறுத்தம்: தினமும் ரூ.100 கோடி முடங்கும் நிலை!

தமிழகம்

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 20 நாட்கள் ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம் நேற்று (நவம்பர் 5) தொடங்கியது. வரும் 25ஆம் தேதி வரை நடக்கும் இந்தப் போராட்டத்தால் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Strike to stop textile production

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் பாவு நூலை கொள்முதல் செய்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களிடம் அதை வழங்கி காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நம்பி பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

மேலும் திருப்பூர் – கோவை மாவட்டங்களில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் வருகிற 25ஆம் தேதி வரை 20 நாட்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Strike to stop textile production

ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் 20 நாட்களுக்கு இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாளென்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.100 கோடி அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் விசைத்தறிகளில் பணியாற்றும் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்து, நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நூல் விலை உயர்வின் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்த காடா துணிகளுக்கு நிலையான விலை கிடைக்காததால் பல கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே விசைத்தறி காடா ஜவுளி உற்பத்தி தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல், “தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் துணி உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர். உலக பொருளாதார மந்தம், உக்ரைன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகவே ஜவுளி உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகிறோம். தற்போது தீபாவளி பண்டிகை போனஸ் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், 25ஆம் தேதி வரை திருப்பூர், கோவை மாவட்டத்தில் காடா ஜவுளி துணி உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனே நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். Strike to stop textile production

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜாதியும், நீதியும்: பன்மைத்துவத்தை மறுக்கும் பாஜக அரசியல்

பியூட்டி டிப்ஸ்: ஃபேஷியல் செய்வது உண்மையிலேயே பலனளிக்குமா?

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0