மத்திய அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசில் காலியாக உள்ள 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (staff seletion commission) வெளியிட்டிருந்தது.
தேர்வு எழுத விண்ணப்பிக்க நாளை (பிப்ரவரி 17) கடைசி தேதி. இதற்காக ஏராளமான தேர்வர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில் நேற்று (பிப்ரவரி 15) முதல் எஸ்.எஸ்.சி இணையதளம் இயங்கவில்லை. இதனால் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எஸ்.எஸ்.சி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில்,

“மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) ஸ்டாப் மற்றும் ஹவில்தார் (சி. பி.ஐ.சி & சி.பி என்) பதவிகளுக்கான எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
விண்ணப்பிக்க கடைசித் தேதி 17.02.2023. ஆனால் நேற்று (15.02.2023) அதற்கான இணைய தளம் இயங்கவில்லை. இன்று சரியாகுமா என தெரியவில்லை. பல விண்ணப்பதாரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இதில் தலையிட்டுத் தீர்வுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
எஸ்.எஸ்.சி-க்கும் இத்தகைய புகார்கள் நேரடியாகச் சென்றிருக்கும். எனவே உடனே இணைய தளத்தைச் சரி செய்து ஆன்லைன் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
கடைசி தேதி நெருங்கும் வேளையில் இப்படி தொழில் நுட்ப பிரச்சினைகள் குறுக்கிட்டு இருப்பதால் நேர இழப்பை ஈடு கட்டும் வகையில் விண்ணப்ப கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும். தீர்வு விரைவில் காணப்படுமென்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் தேர்வர்களும் இணையதளம் முடங்கியதால் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மாற்றி அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
மோனிஷா
அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி: தேவையான தகுதிகள் என்ன?