சத்துகள் நிறைந்த, ஆரோக்கியமான உணவு கீரை. ஆனால், சிலருக்கு ஏனோ பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் விரும்பும்வண்ணம் இந்த அரைக்கீரை பக்கோடா செய்து கொடுத்தால்… இதமான இந்தச் சூழ்நிலையில் தட்டு காலியாகும்.
என்ன தேவை?
அரைக்கீரை – ஒரு கட்டு
கடலை மாவு – 300 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
வனஸ்பதி – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 2
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். வனஸ்பதியை உருக்கி வைக்கவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் அரிசி மாவைச் சேர்த்து பிசிறவும். இத்துடன் தேவையானவற்றில் கொடுத்துள்ள எண்ணெய் நீங்கலாக உள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் புரட்டிவிடவும். தீயை மிதமாக்கி பக்கோடாக்கள் பொன்னிறமாக, மொறுமொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.