நவம்பர் 17ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் நிலையில், சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17ஆம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்கள், “சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம்.
இவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு நவம்பர் 17ஆம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணிக்கும், 4 மணிக்கும் என இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பெரியவர்களுக்கு ரூ.1,090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவையை வரும் ஜனவரி 18ஆம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இருக்கைகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல, சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-ராஜ்
ஹைடெக் நாமக்கல் ஆஞ்சநேயர்: க்யூஆர் கோடு மூலம் காணிக்கை செலுத்தலாம்!