தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கியுள்ளது என்றும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூன் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”நேற்று (ஜூன் 7 ) மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் “பைப்பர்ஜாய்” நேற்று காலை மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று,
வடக்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கோவாவில் இருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில்,
மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு – வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.
மேலும், நாளை(ஜூன் 9) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்;
ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
நாளை ஜூன் 9 ஆம் தேதி கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 145 முதல் 155 லோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூன் 10 ஆம் தேதி வடக்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூன் 11, 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 135 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்”
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஐபிஎல் கோப்பை: ஆந்திர முதல்வரை சந்தித்த அம்பத்தி ராயுடு
தேசிய விளையாட்டு போட்டிகள்: பங்கேற்காத தமிழக மாணவர்கள்!
