தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் வழித்தடங்களில் உச்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பல்வேறு வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதில் முக்கியமாக, ‘வந்தே பாரத்’ ரயில் இயங்கும் சென்னை – பெங்களூரு வழித்தடத்தில் 160கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே சமர்ப்பித்துள்ளது.
இதைத் தவிர்த்து சென்னை – கூடூர், சென்னை – ரேணிகுண்டா வழித்தடத்திலும் 160கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.
மேலும் திருவனந்தபுரம் – மங்களூரு வழித்தடத்தில் 160கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்குவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கொல்லம், திருவனந்தபுரம் என்று கேரளாவுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இந்த வழித்தடத்தில் தினசரி 10-க்கு மேற்பட்ட வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது சென்னை – திண்டுக்கல் வழித்தடத்தில் 110கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் சென்னை – மதுரை இடையே தேஜஸ் ரயில் மற்றும் வைகை விரைவு ரயில்கள் 110கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை – திண்டுக்கல் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 130கி.மீ அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரக்கோணம் – ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை – போத்தனூர், சென்னை – திண்டுக்கல் உள்ளிட்ட வழித்தடங்களின் வேகத்தை 110கி.மீட்டரில் இருந்து 130கி.மீ ஆக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் அரக்கோணம் – செங்கல்பட்டு, நெல்லை – திருச்செந்தூர், தாம்பரம் – செங்கல்பட்டு, நெல்லை – தென்காசி,
சேலம் – கரூர் – நாமக்கல் , கடலூர் துறைமுகம் – விருத்தாசலம், திண்டுக்கல் – பொள்ளாச்சி, மதுரை – வாஞ்சி மணியாச்சி,
ஆகிய வழித்தடங்களில் வேகத்தின் அளவை மணிக்கு 110கி.மீட்டராக உயர்த்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
-ராஜ்
மக்கள் போராட்டத்துக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல்