ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்து இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் அருகே ரஜோரி மாவட்டத்தில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் ராணுவ முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ராணுவ முகாம் எல்லையை சிலர் கடக்க முயன்றனர். பாதுகாப்பு படையினர் அவர்களை தடுக்க முயன்றபோது ராணுவ முகாம் மீது தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இந்த தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல் தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த 3 வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருப்பதாக ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
தீவிரவாதிகள் தாக்குதல்: வீரர்கள் மரணம்!