பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 11-ம் தேதி ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட முயன்றபோது அதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு, 4 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். அவரது உடல் சொந்த ஊரான மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் இருந்து நேற்று(ஆகஸ்ட் 12) மாலை டெல்லி கொண்டு வரப்பட்டு அங்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை ஹைதராபாத் விமான நிலையம் கொண்டுவரப்பட்ட உடல் காலை 11:50 மணி அளவில் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
12:15 மணி அளவில் பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள இயக்குநர் அலுவலகம் முன்பு மரியாதைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
அரசு சார்பில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆகியோரும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோர் லட்சுமணனின் பெற்றோரிடம் வழங்கினர்
விமான நிலையத்தில் இருந்து 12:45 மணி அளவில் தனியார் ஆம்புலன்சில் உடல் எடுத்து செல்லப்பட்டு அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு மதியம் 2 மணி அளவில் சென்றடைந்தது. சாலை மார்க்கமாக உடல் கொண்டு செல்லப்பட்டபோது ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்,

சுமார் 1:30 மணியளவில் சொந்த கிராமத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு அவரது வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சுமார் 2:30 மணியளவில் இராணுவ வீரரின் பூர்வீக தோட்டத்தில் உள்ள இடத்தில் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. 7வது பட்டாலியன் என்சிசி மதுரை குழுவினருடன் வருவாய்த்துறை அதிகாரி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து இராணுவ மரியாதை செலுத்தப்பட்டு 21 குண்டுகள் முழங்க லட்சுமணின் உடல் அவருக்கு பிடித்த கிரிக்கெட் மட்டையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சுமணனுக்கு கிரிக்கெட் விளையாட்டு பிடிக்கும் என்பதால் அதனை வைத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கலை.ரா
Comments are closed.