கோவையில் விடியவிடிய பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிங்காநல்லூர் – வெள்ளலூர் தரைப்பாலம் மூன்றாவது முறையாக அடித்துச் செல்லப்பட்டது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
கோவையில் நேற்று(ஆகஸ்ட் 26) நள்ளிரவில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர் – சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் கனமழை காரணமாக மீண்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அச்சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இரண்டு முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் மூன்றாவது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முறையான திட்டமிடல் இல்லாமல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்படுவதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், மீண்டும் சீரமைப்பதும் என தொடர்ந்து நடைபெறுவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேபோன்று ரெயில் நிலையம், அண்ணாசாலை, காந்திபுரம், டவுன்ஹால் உள்பட மாநகரில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
இதன் காரணமாக அவினாசி சாலை, திருச்சி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ரயில்நிலைய மேம்பாலம் மற்றும் உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கியது.
கலை.ரா
எழும்பூர் கண் மருத்துவமனையின் 200வது ஆண்டு விழா : ரூ195 கோடி திட்டங்கள் தொடக்கம்!