நெல்லை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை அம்பாசமுத்திர கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்பீர் சிங், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் பற்களை ஜல்லி கற்களை கொண்டு பிடுங்குவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், அவர் உட்பட பல்பிடுங்கிய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது காவல்துறை தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைக்குறிச்சி தனி பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
நெல்லை எஸ்.பி. சரவணன் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் கூடுதல் பொறுப்பாக நெல்லை மாவட்டத்தையும் கவனிப்பார் என்று உள்துறை செயலாளர் பனீந்தர ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நெல்லைக்கு புதிய எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை நகர துணை ஆணையர் என். சிலம்பரசன் திருநெல்வேலி எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோன்று சென்னை தெற்கு பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி கே.சண்முகம், கோவை நகர துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் V பட்டாலியன், கமாண்டண்ட் டி.குமார், சென்னை மெட்ரோ ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
பிரியா