நாளை தீபாவளி. இன்று வரை என்ன செய்வது என்று யோசிப்பவர்கள் பலருண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் தித்திப்பான இந்த ஸ்பெஷல் ஷாஹி ரசமலாய் ரெசிப்பி.
என்ன தேவை?
ரசமலாய் செய்ய…
காய்ச்சாத பால் – அரை லிட்டர்
எலுமிச்சைச் சாறு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – ஒன்றே முக்கால் கப்
சர்க்கரை – ஒரு கப்
ரோஸ் வாட்டர் – ஒரு டேபிள்ஸ்பூன்
ஸ்வீட் பால் செய்ய…
பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – அரை கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
அலங்கரிக்க…
பிஸ்தா துருவல் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் இறக்கவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து, பால் திரியும் வரை தொடர்ந்து கிளறவும். இதை மெல்லிய துணியில் ஊற்றி எலுமிச்சை வாசனை போகும் வரை நன்கு கழுவவும். பிறகு, மூட்டைக் கட்டித் தண்ணீர் முழுவதும் வடியும் வரை தொங்கவிடவும். இதுவே பனீர். இந்த பனீரைச் சிறிய உருண்டைகளாக்கி நடுவே லேசாக அழுத்தித் தட்டையாக்கவும்.
மற்றோர் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் ரோஸ் வாட்டர், தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரைத் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருட்டி தட்டையாக்கிவைத்த பனீரைப் போட்டு மூடி 15 நிமிடங்கள் வேகவைக்கவும். நடுநடுவே அவை உடைந்துவிடாமல் மெதுவாகக் கிளறி இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஸ்வீட் பால் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து கைவிடாமல் கிளறி, கொதிக்கவிட்டு இறக்கவும். உருட்டித் தட்டையாக்கிய பனீரை எடுத்து லேசாகப் பிழிந்து, ஸ்வீட் பால் கலவையில் போட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் குளிரவைக்கவும். மேலே பிஸ்தா துருவல் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மகிழம்பூ முறுக்கு!
தீபாவளி விடுமுறை… ஸ்தம்பித்த சென்னை… சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
”விஜய் ரசிகர்கள் பாதிப்பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்” – சீமான் நம்பிக்கை!