தடையை மீறி சென்னை பல்கலை.யில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட எஸ்எஃப்ஐ

தமிழகம்

குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் விதித்த தடையை மீறி இந்திய மாணவர் சங்கத்தினர் தங்களது லேப்டாப்களில் பார்த்துள்ளனர்.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி நடந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதே கலவரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரிட்டிஷ் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தியது.

இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிபிசி செய்தி ஊடகம் சமீபத்தில் ‘India: The Modi Question’ எனும் ஆவணப்படத்தை இயக்கி இரண்டு பாகங்களாக சமீபத்தில் வெளியிட்டது. எனினும் இதில் உண்மைக்கு மாறான தகவல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி மத்திய அரசு தடை விதித்தது.

தடையை மீறி திரையிட்ட எஸ்எஃப்ஐ

இதனை தொடர்ந்து டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டது. எனினும் இந்த ஆவணப்படத்தை ‘இந்திய மாணவர் சங்கத்தினர்’ (SFI) கேரளாவில் பல்வேறு கல்வி நிலையங்களிலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும், ஜேஎன்யு பல்கலையிலும் திரையிட்டனர்.

அதேபோல ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் இந்த படத்தை திரையிட முற்பட்டதாக கூறி எஸ்எஃப்ஐ மாணவர் சங்கத்தை சேர்ந்த 13 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

ஆனால் 24 மணி நேரம் ஆன பின்னரும் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படாததால் நாடு முழுவதும் எஸ்எஃப்ஐ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டிலும் போராட்டம்

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் கவுன்சிலர் பிரியதர்ஷினி தலைமையில் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மொபைலில் India: The Modi Question ஆவணப்படத்தை பார்த்தனர்.

நேற்றிரவு சென்னை பிரசிடென்சி கல்லூரியின் விக்டோரியா விடுதியில் எஸ்எஃப்ஐ மாணவர்கள் இந்த திரைப்படத்தை திரையிட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த ஆவணப்படம் திரையிடப்படும் என்று எஸ்எஃப்ஐ கூறியிருந்தது. எனினும் இதனையறிந்த சென்னை பல்கலைக் கழகம் உடனடியாக தடைவிதித்தது.

எஸ்எஃப்ஐ கண்டனம்

இதனையடுத்து பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை விதித்த சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எஸ்எஃப்ஐ கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மாணவர் சங்க மாநிலச் தலைவர் கோ.அரவிந்தசாமி மற்றும் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச ஊடகமான பிபிசி 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையை அடிப்படையாக வைத்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்திருந்தது.

தற்போதைய உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து இந்த ஆவணப்படம் தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. எனவேதான் மத்திய அரசு இந்நிகழ்ச்சியை இந்தியாவில் ஒளிபரப்ப தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து வருகிறது.

ஆனால், பிபிசி இந்த ஆவண படத்தை அனைவரும் பார்க்கும் வகையில் கூகுள் இணையத்தில் வெளியிட்டது. அதனை இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கல்வி வளாகங்களில் உள்ள மாணவர்களும் மற்றும் பொதுமக்களும், இளைஞர்களும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த 26-ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியில் விக்டோரியா விடுதியில் மாணவர்கள் ஆவணப்படத்தை பார்த்துள்ளனர். இன்று (ஜன. 27 ) சென்னை பல்கலைக்கழகத்தில் ஆவணப்படத்தை திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் கிளை ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் இந்நிகழ்விற்கு தடை விதித்துள்ளது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. மேலும் இது அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19-க்கு எதிரானதாகும்.

மாணவர்கள் இந்நிகழ்வை பல்கலைக்கழகத்தில் உள்ள எந்த ஒரு வகுப்பறையிலோ அல்லது அரங்கத்திலோ பார்க்க ஏற்பாடு செய்யவில்லை. அவர்கள் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் மாணவர்கள் தங்களது மடிக்கணினி மூலமாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் ஒருதலைபட்சமாக ஆர்எஸ்எஸ் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டு மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக கிளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்விற்கு தடை விதித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

மாணவர்களின் ஜனநாயக நடவடிக்கையை தடை விதிக்கும் இத்தகைய நிகழ்வை இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு கண்டிக்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்கள்

எனினும் சென்னை பல்கலை.யின் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை மீறி தங்களது லேப்டாப் மற்றும் மொபைலில் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை மாணவர்கள் பார்த்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்த இந்திய ஆல்ரவுண்டர்!

முதியோர்களை கொலை செய்வது ஏன்?: தலைக்கூத்தலை பேசும் தமிழ் படம்!

+1
0
+1
1
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

2 thoughts on “தடையை மீறி சென்னை பல்கலை.யில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட எஸ்எஃப்ஐ

  1. இந்தியாவை கொள்ளை அடித்த ஆங்கில ஆட்சி பற்றி பிபிசி டாகுமெண்ட்ரி எடுக்குமா ?

  2. மக்கள் வரிப்பணத்தில் உலகம் சுற்றி தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று கூறிய யாரென்று இன்று மக்களுக்கு தெரிந்து விட்டது, தன் அதிகாரத்தில் தேர்தல் ஆணையம் கை கட்டப்பட்டு நீதி மன்றம் வாயை கட்டிவைத்ததை போல் அல்லாமல் பிபிசி யை கண்ட்ரோல் பண்ண முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *