நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 2023 செப்டம்பா் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.62 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 10 சதவிகிதம் அதிகமாகும். தமிழகத்தில் ரூ.10,481 கோடி வசூலாகியுள்ளது.
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் செப்டம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,62,712 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.29,818 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடி ஆகும். இதில், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடி (சரக்குகள் இறக்குமதி மீதான ரூ.41,145 கோடி), செஸ் வரி ரூ.11,613 கோடி (சரக்குகள் இறக்குமதி மீதான ரூ.881 கோடி ஆகும்.
நடப்பு நிதியாண்டில் செப்டம்பா் வரையிலான அரையாண்டில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.9,92,508 கோடியாகும். சராசரியாக மாதம் ரூ.1.65 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. செப்டம்பர் 2022 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவிகிதம் அதிகமாகும். தமிழ்நாட்டில் செப்டம்பர் 2023இல் ரூ.10,481 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21 சதவிகிதம் அதிகரிப்பாகும்.
கடந்த செப்டம்பர் 2022இல் ரூ.8,637 கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருந்தது. கடந்த ஏப்ரல் 2023இல் சாதனை அளவாக ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகி இருந்தது. நடப்பு நிதியாண்டில் நான்காவது முறையாக ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…