குமரியில் சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமையவுள்ள வளாகத்தில் களரி பயிற்சிக்கான தனி ஆராய்ச்சி மையமும் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நேற்று (செப்டம்பர் 24) சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமைப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கன்னியாகுமரி மாவட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இயற்கை முறையில் மருத்துவம் மேற்கொள்ளும் வகையில் சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட அரசுக்குச் சொந்தமான சுமார் 81 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தினை மாவட்ட ஆட்சியருடன் சென்று பார்வையிடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அரிய வகை மருத்துவ குணமுடைய மூலிகைகள் நிறைந்த மாவட்டமாகும். சித்த மருத்துவத்தில் வர்மக்கலை என்பது முக்கியமான ஒன்றாகும்.
நம்முடைய முன்னோர்கள் சித்த மருத்துவத்தையும், வர்மக் கலையையும் பயன்படுத்தி சித்த வர்ம மருத்துவத்தில் உலக அரங்கில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார்கள்.
இந்த மருத்துவ முறையினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அறிவுறுத்தியது.
அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இறுதி அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான உரிய வழிகாட்டுதல்கள் பெற்று பணிகள் துவங்கப்படும்.
பலவிதமான உள் மற்றும் வெளி காயங்கள், நரம்பு தசை நோய்கள், நீண்ட நாட்களாக உள்ள உடல் பிரச்சினைகள், மூட்டு, கழுத்து, முதுகு பிரச்சினைகள், பார்வை கோளாறுகள், ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உள்ளிட்ட பலவிதமான உடல் பிரச்சினைகளுக்கு சித்த வர்ம மருத்துவ மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகளுடன் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்குரிய பாரம்பரியமான வர்ம சிகிச்சைகள் குறித்து வர்ம இலக்கியங்களில் கண்டறிந்து, அவற்றினை பாதுகாப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமையவுள்ள வளாகத்தில் களரி பயிற்சிக்கான தனி ஆராய்ச்சி மையமும் தொடங்கப்படும்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முதல் ‘கேம் சேஞ்சர்’ அப்டேட் வரை!
ஹெல்த் டிப்ஸ்: டாய்லெட்டில் சிகரெட்டை புகைத்தால்தான் மலம் கழிக்க முடியுமா?