துரைமுருகன் பாஜகவை கண்டு பயந்து விட்டார் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை தாராபட்டியில் நிலையூர் கால்வாய் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (நவம்பர் 18) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத்துறையில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் நியாயவிலைக் கடையில் தரமான அரிசி வழங்கப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தப்படவில்லை. கூட்டுறவுத்துறை அகில இந்திய அளவில் பாரட்டப்பட்டது.
தமிழக அரசு 27 விருதுகள் வாங்கியது யார் ரேசன் அரிசியை கடத்தினாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி யார் தலைமையில் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அண்ணா திராவிட முன்னேற்ற கழக எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு விட்டது. இதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்கு போகலாம்.
ஏறாதவர்கள் அவர்கள் ஊரிலேயே இருக்கலாம். என்றைக்கும் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும். தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், அம்மா காலத்திலிருந்து இதனை தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.
எங்களை நம்பி வருகிறவர்களை நாங்கள் நிச்சயமாக கை தூக்கி விடுவோம். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தனித்து நின்று 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்தியாவில் அப்படி எந்த கட்சியும் கிடையாது.
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்துவார்கள். திமுக லட்சக்கணக்கான பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.” என்றார்.
“அதிமுக நமக்கு ஒரு பொருட்டே இல்லை. பாஜக அசுர பலத்துடன் ஒரு பிசாசு மாதிரி நமக்கு இடைஞ்சல் தருகிறார்கள் என்று துரைமுருகன் பேசியிருக்கிறார். அவர் பாஜகதவைக் கண்டு பயந்து விட்டார். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு ரெய்டு நடந்திருக்கிறது.
அமைச்சர் பொன்முடியை செம்மண் வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவிக்க முடியாது என்று கூறியுள்ளது. திமுகவை ஓட ஓட விரட்டக்கூடிய சிப்பாய்கள் நிறைந்தது அதிமுக தான்.
தமிழகம் என்பது திராவிட பூமி. திராவிட இயக்கம் தான் ஆட்சியில் இருக்கும். நம்பி வந்தால் அவர்களை தூக்கி செல்வோம்.
அம்மாவினுடைய தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக தான் உள்ளோம். சசிகலா, தினகரன் கட்சியில் சேர்வதை எதிர்காலம் தான் பதில் சொல்லும்.
அவர்கள் உரிய நேரத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்திக்க வேண்டும்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
செல்வம்
விண்ணில் பாய்ந்த முதல் தனியார் ராக்கெட்!
பிரியா வழக்கு: முன் ஜாமீன் கேட்கும் மருத்துவர்கள்!