மயிலாடுதுறை மாவட்டத்தில் உலவும் சிறுத்தை ஒரு வாரமாகியும் பிடிபடாததால் மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் உள்ள நிலையில் மோப்பநாய்கள் மூலம் சிறுத்தையை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்தனர். சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
சிறுத்தையின் நடமாட்டத்தால் கடந்த 3,4,5 தேதிகளில் ஆரோக்கிய நாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது,
கடந்த 5-ந்தேதி 10-ம் வகுப்பு பொது தேர்வை பலத்த பாதுகாப்புடன் மாணவ, மாணவிகள் எழுதினர். அன்றைய தினம் சித்தர் காடு பகுதியில் ஒரு ஆடும், ஏப்ரல் 6-ஆம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஒரு ஆடும் கடிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்து கிடந்தது.
இது சிறுத்தை தான் அடித்து கொன்றததா என கண்டறிய ஆடுகளின் உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில்தான் சிறுத்தை ஆடுகளை அடித்து கொன்றதா என தெரிய வரும்.
இந்த நிலையில், சிறுத்தையை பிடிக்க 30-க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து, ஆனைமலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்த வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து,
சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்று வட்டார பகுதி முழுவதையும் கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து தேடுதல்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள 9 கூண்டுகளை நேற்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் எதிலும் சிறுத்தை சிக்கவில்லை.
இந்த கூண்டுகளில் உயிருடன் ஆடுகள் வைக்கப்பட்டுள்ளது. அதன் சத்தம் கேட்டு சிறுத்தை வரும் என வனத்துறையினர் எதிர்பார்த்த நிலையில் சிறுத்தை சிக்காதது வனத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தொடர்ந்து நேற்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
மயிலாடுதுறை சித்தர்காடு ரெயில் தண்டவாளம் பாலத்தில் நேற்று வனத்துறையினர் கழிவுகளை சேகரித்தனர். அது சிறுத்தையின் கழிவாக என சோதனை செய்து வருகின்றனர்.
முன்னதாக சென்னையில் இருந்து வந்த கூடுதல் முதன்மை தலைமை வனக்காவலர் நாகநாதன் சிறுத்தை தேடும் பணியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் அமைப்பதற்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். எனினும் ஒரு வாரமாகியும் சிறுத்தை பிடிபடாததால் ஆராக்கியநாதபுரம், சித்தர்காடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் புதிய தரிசனங்கள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: பனானா ஐஸ் ஷேக்
LSGvsGT : தொடர்ந்து 3வது வெற்றி… யாஷ் பந்துவீச்சில் சுருண்டது குஜராத் அணி!