கரூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் திடீரென்று பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி தூய்மை பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்காக 400 தூய்மைப் பணியாளர்கள் 83 ஓட்டுநர்கள், 20 மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 40-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஒரு சில வாகன ஓட்டிகள் பணிக்குச் செல்லாமல் நேற்று பணிகளை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு சில வார்டுகளில் குப்பை அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்தப் போராட்டம் குறித்து பேசியவர்கள், “தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.692 என்ற நிலையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ரூ.400 மட்டுமே வழங்கி வருகிறது. மேலும், பிஎஃப், இஎஸ்ஐ பிடிப்பதில்லை.
காலை 6 மணிக்கு வரும் பணியாளர்களுக்கு மதியம் 2 மணியோடு பணி நேரம் முடிவடையும். ஆனால், இப்போது மாலை 6 மணி வரை பணியை நீட்டித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். ஆனால், அது தருவதில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் 10 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஆணையருக்கு 10 புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. நிரந்தர தொழிலாளர்களுக்கு இதுவரை தீபாவளி முன்பணம் வழங்கப்படவில்லை.
மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தெரியும். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களிடம் மேயர் பேச்சுவார்த்தை நடத்தி எட்டு மணி நேர வேலையை உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்தார். அதனால் தூய்மைப் பணியாளர்கள், காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஜார்க்கண்ட் முதற்கட்ட தேர்தல் முதல் பன்னீர் தம்பி வழக்கில் தீர்ப்பு வரை!
கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!
விசிகவில் புதிய மா.செக்கள்… -பழையவர்கள் மீது கை வைக்காத திருமா- என்ன பின்னணி!