சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரும் மனு மீது ஆறு வாரத்தில் முடிவெடுக்க பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை தொடங்கி, அதை பதிவு செய்யக் கோரினர்.
இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்தனர்.
இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்திலும் குதித்தனர்.
இந்தநிலையில் தொழிற் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி சிஜடியூ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், “தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், “சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று(டிசம்பர் 5) நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு, விசாரணைக்கு வந்தபோது சாம்சங் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி ராஜகோபால் ஆஜராகி, “தங்கள் நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது. நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் துவங்குவது அடிப்படை உரிமை அல்ல” என்று வாதாடினார்.
தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத், “தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை. பல நிறுவனங்களின் பெயர்களில் தொழிற்சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளது. ஏன், கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் இதுகுறித்து சட்டத்திற்கு உட்பட்டு பரீசிலித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான மனுவை ஆறு வாரத்துக்குள் பரீசிலித்து முடிவெடுக்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
நடிகர் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட அந்த நோய்… அமெரிக்கா சென்ற பின்னணி!
சரி கமப நிகழ்ச்சி வழியாக தர்ஷினி கிராமத்துக்கு கிடைத்த பஸ் போக்குவரத்து… எப்படி?