திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி… தலைமறைவான பெண் சிக்கியது எப்படி?
திருமணம் செய்து கொள்வதாக இளைஞர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவர் தனது திருமணத்துக்காக பெண் தேடி வந்தார். இதற்காக ஒரு மேட்ரிமேனியல் நிறுவனத்தில் தனது விவரங்களை கடந்தாண்டு ஆகஸ்ட்டில் பதிவு செய்திருந்தார்.
அப்போது அதே நிறுவனத்தில் மாப்பிள்ளை தேடி பதிவு செய்திருந்த ஒரு பெண் இவரிடம் அறிமுகமானார். அந்தப் பெண், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடி வருகின்றனர். பதிவில் உங்களது விவரங்கள் பார்த்தேன் எனக்கு பிடித்துள்ளது எனக்கூறி பேச்சை ஆரம்பித்துள்ளார்.
அதன் பின்னர், வாட்ஸ்அப் தகவல் மூலமாகவும், வீடியோ கால் மூலமாகவும் இருவரும் தொடர்ந்து பேசி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்தச் சூழலில், அந்த பெண் தனது அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது சிகிச்சை செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என இளைஞரிடம் கூறியுள்ளார்.
அவரும் அந்தப் பெண் கூறியதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ.7,12,000 வரை அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரியில் இருந்து அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.
செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்று பெண் தெரிவித்த முகவரியில் விசாரித்த போது, அது போலியானது எனத் தெரியவந்துள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் மேற்கண்ட மோசடி தொடர்பாக கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் அப்பெண்ணின் செல்போன் எண், வங்கிக் கணக்கு எண் விவரங்களை வைத்து விசாரித்த போது, மோசடியில் ஈடுபட்டவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த பிரியா எனத் தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த இவரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து பேசியுள்ள கோவை சைபர் க்ரைம் போலீஸார், ”பிரியாவுக்கு முதல் திருமணமாகி கணவர் உயிரிழந்து விட்டார். 2-வது திருமணம் செய்து விவாகரத்து பெற்று விட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பின்னர், 3-வதாகவும், 4-வதாகவும் அடுத்தடுத்து திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மோசடியாக பணம் சம்பாதிக்க திட்டமிட்ட அவர், திருமண மேட்ரிமேனி நிறுவனத்தில் போலி பெயர் விவரங்களை பதிவு செய்து, அதில் பதிவு செய்துள்ள இளைஞர்களிடம் பேசி பணம் வசூலித்துள்ளார்.
மேற்கண்ட புகார்தாரரிடம் ரூ.7.12 லட்சம் மட்டுமின்றி, அதற்கு பின்னர், ஈரோட்டைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.4 லட்சம் வரை பணத்தை வசூலித்துள்ளார். அவரது பின்னணி, உதவியவர்கள் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது” என்று சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: ஸ்டாலின் கேரளா பயணம் முதல் 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் பாஸ்தா
அந்த அளவுக்கா கொடும பண்றாங்க? – அப்டேட் குமாரு
“செல்வப்பெருந்தகை என்கிட்ட மாட்டிக்கிட்டாரு” – துரைமுருகன் கலகல பேச்சு!