சேலம் அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில் பொதுமக்களை ஏமாற்றிய நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். salem annai therasa ngo
இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“கடந்த இரண்டு வருடங்களாக சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில், விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் மற்றும் சையது முகமது ஆகியோர்கள், பொது மக்களை வரவழைத்து இலவசமாக கணினி பயிற்சி, தையல் பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி, TNPSC Group-I முதல் IV வரையிலான தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், அரசுபள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக டியூசன் கற்றுத் தரப்படும் என்று கூறியுள்ளனர்.
மேலும் கூடைப் பின்னல், பாக்குதட்டு தயாரித்தல், மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரித்தல், மற்றும் கைவினைத் தொழில்கள் கற்றுத் தரப்படும் என்றும், பயிற்சியின் போது பத்து ரூபாயில் மதிய உணவு வழங்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர். பொதுமக்களை கூட்டி, சுமார் ஒரு மாதம் பயிற்சி அளித்து பயிற்சியின் போது பத்து ரூபாயில் இலவச சாப்பாடு மற்றும் இடையிலே தேனீர், தின்பண்டங்கள் கொடுத்துள்ளனர்.
இதனால் மகிழ்சியடைந்த பொதுமக்கள் நாளுக்கு நாள் அதிகமாக கூட ஆரம்பித்துள்ளனர். மேலும் தாங்கள் தொடங்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக அதிக பணம் கிடைக்கும் என்றும், வாழ்க்கைதரம் உயரும், அப்பொழுது தங்களை போல் நிறுவனம் ஆரம்பித்து, எழை எளிய மக்களுக்கு உதவலாம் என்று சட்டத்தால் வரைமுறைப்படுத்தாத பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். salem annai therasa ngo

அதன்படி, Grocery Scheme என்ற பெயரில் ரூ.1,000-ஐ முதலீடு செய்தால், சுமார் ஒன்றறை மாதத்திற்குள் ரூ.2,000க்கான வீட்டுமளிகைசாமான்களும், Pension Scheme என்ற பெயரில் ரூ.1,00,000 செலுத்தினால் 7 மாதத்திற்கு மாதம் ரூ. 30,000 வீதம் மொத்தம் ரூ. 2,10,000-ம், தருவதாகவும், Housing Plot Scheme மூலம் மாதம் ரூ.10,000 வீதம் 12 மாதத்திற்கு ரூ.1,20,000-த்தை முதலீடாக செலுத்தினால் 750 சதுர அடிகள், காலிமனை கொடுப்பதாகவும், Gold Jewel Scheme கீழ் மாதம் ரூ.1,500 வீதம் 12 மாதத்திற்கு, 18,000 கட்டினால் 5 கிராம் தங்க நகை வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதை நம்பிய பொதுமக்கள் அவர்களின் வசதிக்கேற்ப பணத்தை கடந்த இரண்டு வருடமாக முதலீடு செய்துவந்துள்ளனர். இறுதியாக கடந்த 23.01.2025ம் தேதி பொதுமக்களிடம் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தால் மாதம் ரூ.30,000 வீதம் ஒன்பது மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், இந்த சிறப்பு திட்டம் இன்றே கடைசி என்றும், விளம்பரம் செய்து பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளனர்.
இதுகுறித்து 23.01.2025 அன்று கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண்: 01/2025 U/s 316, 318 r/w 62 BNS 2023 & Sec 3, 5, 21(1), 23 of the Banning of Unregulated Deposit Schemes Act, 2019 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் தலைமையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை இயங்கி வந்த சிவகாமி திருமண மண்டபத்திற்கு சென்றனர்.
சிறப்பு திட்டம் மற்றும் பிறதிட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளது கண்டுபிக்கப்பட்டது. பின்னர் விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் மற்றும் சையத் மஹமூத் ஆகியோர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் ரூ.12,68,42,850 மற்றும் சுமார் 3 கிலோ கிராம் எடையுள்ள தங்கநகையும், சுமார் 13 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளையும், அவர்களிடமிருந்து கைப்பற்றிய பொருட்களையும், கோவை TNPID கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பயன்படுத்தி வந்த நான்கு சக்கர வாகனங்கள் மூன்றையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் விஜயபானு மீது ஏற்கனவே சென்னை, பூந்தமல்லி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் 216 நபர்கள், முதலீடாக 4,31,95,500 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த நிறுவனத்தில் பணத்தை இழந்த பொதுமக்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்குமாறு தெரியப்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. salem annai therasa ngo