கடந்த இரு நாட்களாகத் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சாராய வேட்டையில், 1558 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று (மே 16) தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து இத்தனை பேர் உயிரிழந்திருப்பது அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத் தமிழகம் முழுவதும் சோதனையில் இறங்கியது காவல்துறை.
இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“கடந்த 2 நாட்களாகத் தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
4943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 218 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.
2023ஆம் ஆண்டு இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4,534 பெண்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேபோல் கள்ளச்சாராயம் கடத்த, பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
கள்ளச்சாராய குற்றவாளியுடன் அமைச்சர் மஸ்தான்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?