கோயிலின் பெயரில் இணையதளம் நடத்தி வசூல் செய்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அறுபதாம் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். இதற்காக கோயிலை அணுகும், பலர் தவறுதலாக தனியார் இணையதளத்தினை தொடர்பு கொள்கின்றனர்.
கோயில் நிர்வாகம் தரப்பில் 2000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், தனியார் இணையதளங்கள் நான்கு லட்சம் ரூபாய் வரை பக்தர்களிடமிருந்து வசூலித்து வருகின்றன.
எனவே அமிர்தகடேஸ்வரர் கோயிலின் பெயரில் உள்ள தனியார் இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று (அக்டோபர் 11) விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, தங்களது உத்தரவில் கோயிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளத்தை நடத்தக் கூடாது.
கோயில் இணை ஆணையர் தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்கி, அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்கவும் வேண்டும்.
அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் உணர்வை வியாபாரமாக அணுக கூடாது.
கோயிலின் பெயரில் தனிநபர்கள் இணையதளத்தை நடத்துவது தவறு என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருவானைக்காவல் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கலை.ரா