போக்குவரத்து சார்ந்த ஆவணங்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் வகையில் தபால் துறையுடன் இணைந்து செயல்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 91 ஆர். டி. ஓ அலுவலகங்கள், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களை கணினி மயமாக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது.
ஆர். டி. ஓ., அலுவலகங்களில், 48 சேவைகளில் முதற்கட்டமாக ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட ஆறு சேவைகள் ஏற்கனவே ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனையடுத்து பழகுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஒட்டுநர் உரிமம், வாகனத்திற்கான தற்காலிக பதிவெண்,
பர்மிட்டில் பெயர் மாற்றம், பர்மிட் ஒப்படைத்தல் உள்ளிட்ட 25 சேவைகளை ஆன்லைனில் பெறும் வசதி ஜூலை 14 ஆம் தேதி துவங்கப்பட்டது.
இருப்பினும் முழு வீச்சில் செயல்படவில்லை. அதை சரி செய்ய போக்குவரத்து ஆணையரகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில், “ஆர். டி. ஓ., அலுவலகங்களில் தற்போது 31 வகையான சேவைகள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.
மக்கள் இந்த சேவைகளை பெற ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விபரங்கள் சரியாக இல்லாமல் மாறுபட்டிருந்தால் இந்த சேவைகளை பெற இயலாது.
போக்குவரத்து சார்ந்த சேவைகளை மாநில போக்குவரத்து ஆணையத்தின் https://tnsta.gov.in இணைய தளத்தில் பெறலாம். மேலும், ஆவணங்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், தபால் துறையுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.
ஆனால், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்கவும், வாகன எப். சி., உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பெறவும், ஆர். டி. ஓ., அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மோனிஷா
விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1: இஸ்ரோவின் டார்கெட் என்ன?
ரயில்வே வாரியத்தின் முதல் பெண் CEO : யார் இந்த ஜெய வர்மா சின்ஹா?
மத்திய அரசு நிறுவனத்தில் நடிகர் மாதவனுக்கு புதிய பதவி!