பொன்னேரி அருகே மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பாதிப்புக்குள்ளாவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி பகுதியில் உள்ளது பெரியகாவனம் கிராமம். இங்கு 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பழவேற்காடு – புதுவாயல் நெடுஞ்சாலை இந்த கிராமத்தின் வழியாக செல்கிறது. இந்த சாலையில் கடந்த சில நாட்களாக மண் ஏற்றிக்கொண்டு அதிக அளவில் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் மதிவாணன், இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் ஏலியம்பேடு கிராமத்தின் வழியாக புதுவாயல் – பழவேற்காடு நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் குடியிருப்புகளில் அதிக அளவில் தூசிகள் புகுவதால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும், தூசிகள் பரவாமல் இருக்க சாலையில் தண்ணீர் தெளிக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இரு இடங்களில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.
ராஜ்