76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ரவி இன்று (ஜனவரி 26) தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
அதன்படி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கமும், நாராயணசாமி நெல் உற்பத்தி திறன் விருது தேனியைச் சேர்ந்த விவசாயி முருகவேலுக்கும் வழங்கப்பட்டது.

விழுப்புரம் சட்டம் ஒழுங்கு தலைமை காவலர் மகாமார்க்ஸ், விழுப்புரம் காவல் ஆய்வாளர் சின்னகாமணன், துறையூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் கார்த்தி, ஆயுதப்படை காவலர்கள் சிவா, பூமாலை ஆகியோருக்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு மதுரை மாவட்டத்திற்கும், இரண்டாம் பரிசு திருப்பூர், மூன்றாம் பரிசு திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கி ஸ்டாலின் சிறப்பித்தார்.