தைப்பூசத்தை ஒட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், நாளை (பிப்ரவரி 11) ஆவணப் பதிவுகள் நடைபெறும் என பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. registration office open Thaipoosam
தமிழகத்தில் அரசு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்காது. எனினும் பொதுமக்களின் நலன் கருதி மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகம் திறந்து இருந்தால் அதிக பத்திரப்பதிவு நடக்கும் என்பதால் தற்போது குறிப்பிட்ட விடுமுறை நாட்களிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது.
இந்த நிலையில் தைப்பூச தினத்தில் மக்கள் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாளை பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பதிவுத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான 11.02.2025 செவ்வாய் கிழமை அன்று தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே முந்தைய ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.