சிறையில் ரங்கராஜன் நரசிம்மன் உண்ணாவிரதம்!

Published On:

| By Aara

துணை முதல்வர் உதயநிதி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாகவும், அதன் பின் பெண் வழக்கறிஞரை அவமதித்ததாகவும் இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன், சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

டிசம்பர் 15 ஆம் தேதி மாலையில் ரங்கராஜன் நரசிம்மன் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் ஸ்ரீரங்கத்தில் கைது செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் ஜீயரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் மீது டிசம்பர் 19 ஆம் தேதி பெண் வழக்கறிஞரை ஆபாசமாக அவதூறு செய்தது தொடர்பாக பெண்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், ரங்கராஜன் நரசிம்மன் மீது ஆழ்வார் திருநகரி ஜீயரும் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், புழல் சிறையில் இருக்கும் ரங்கராஜன் நரசிம்மன் சிறையில் அடைக்கப்பட்டது முதல் உண்ணாவிரதம் இருந்து வருவதாக சிறை வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்கிறது.

”ரங்கராஜ நரசிம்மன் தண்ணீரை தவிர எதையும் சாப்பிடுவதில்லை. அவர் தன் உடல் நிலை கருதி வெளியே மருத்துவமனையில் அட்மிட் செய்யும்படி வலியுறுத்தி வருகிறார். அதனாலேயே அவர் சாப்பிடாமல் இருக்கிறார். அவ்வப்போது சிறை மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்” என்று புழல் சிறைத்துறை வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

அதேநேரம், ரங்கராஜன் நரசிம்மனுக்கு நெருக்கமானவர்களோ, “ரங்கராஜன் நரசிம்மன் சமய மற்றும் வழிபாட்டு கட்டுப்பாடுகள் மிக்கவர். அவர் ’சமாஷ்ரயனம்’ எனப்படும், சங்கு சக்கர முத்திரை பொறிக்கப்பட்டவர்கள் சமைத்த உணவைதான் சாப்பிடுவார். அதுவும் இது மார்கழி மாதம். தினமும் காலை திருப்பாவை சாற்றுமறை முடித்துத்தான் சாப்பிடுவார்.

ஆனால், சிறையில் தனது சமய அனுஷ்டானங்களை பின்பற்ற முடியாததால், வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி உண்ணாவிரதம் இருக்கிறார் ரங்கராஜன் நரசிம்மன். இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது” என்கிறார்கள்.

-வணங்காமுடி வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கேரளாவின் குப்பைக் கிடங்கா தமிழகம்? – மருத்துவக்கழிவு கொண்டுவந்த லாரி பறிமுதல்!

சென்னையில் மழை பெய்யுமா? – வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share