அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு மேலும் 4ரவுடிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் 2012ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரபல ரவுடிகள் 13பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
அதற்காக சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 ல் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நவம்பர் 14ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடிகளான சத்யராஜ், லெட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.
மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை 17ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டிருந்தார்
அதன்படி இன்று(நவம்பர் 17) மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய நான்கு பேர் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகி சோதனைக்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
சோதனையின் போது தங்களின் மருத்துவரும், வழக்கறிஞரும் உடனிருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்ட 12பேருக்கும் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன் பின்பு வரும் 21ஆம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதில் தென்கோவன் என்கிற சண்முகம் மட்டும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா