இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படும் ரம்ஜான் பண்டிகையின் ரமலான் நோன்பு தொடங்கியது.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பதும் ஒன்றாகும். சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரை தண்ணீர், உணவு எடுத்துக் கொள்ளாமல் நோன்பிருந்து தாராவீஹ் என்ற சிறப்புத் தொழுகை செய்த பின்னர் நோன்பை முடித்துக் கொள்வார்கள்.
நேற்று (மார்ச் 23) வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து ரமலான் நோன்பு தொடங்கியது.
தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு மார்ச் 24-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் அனைவரும் நேற்று இரவு ரமலான் நோன்பை கடைப்பிடிக்கத் தொடங்கினர்.
இதில் உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உட்படத் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் நோன்பை கடைப்பிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், நோன்பு காலங்களில் பசியுடன் இருப்பதோடு, வீண் விவாதங்களைத் தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது வழக்கம்.
ரமலான் நோன்பு தொடங்கியுள்ள ஏராளமானவர்கள் நோன்பிருப்பவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா