முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 3) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற போது அவருடன் பாதுகாப்பு பணிக்கு சென்ற முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பின் இரு முறை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று ராஜேஷ் தாஸ், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
அதுபோன்று, தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி ராஜேஷ் தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “எந்த காரணமும் இல்லாமல் தனது சஸ்பெண்ட் உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் மத்திய நிர்வாக தீர்ப்பாயம், விசாரணையை தள்ளி வைத்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை இன்று (டிசம்பர் 3) விசாரித்த நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வு, ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டது.
ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
பிரியா
“நீதிமன்றம் கிடங்கல்ல”- நீட் வழக்கில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை!
தியேட்டர்களில் வெளி உணவு வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!