ராகி (கேழ்வரகு) என்றாலே ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யக் கூடிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அத்தகைய ராகி சேமியாவில் சத்தான இந்த மசாலா கிச்சடி செய்து அசத்துங்கள்.
உங்கள் இல்லத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற இந்த ராகி சேமியா மசாலா கிச்சடியை பகல் உணவாக பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.
என்ன தேவை?
ராகி சேமியா – ஒரு பாக்கெட்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2 (இரண்டாகக் கீறவும்)
கேரட், பீன்ஸ், பட்டாணி – தலா கால் கப்
சோம்பு – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ராகி சேமியாவுடன் மூழ்கும் அளவு வெந்நீர்விட்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி மூடிபோட்டு, மிதமான தீயில் வேகவிடவும்.
பின்னர் மூடியைத் திறந்து ராகி சேமியாவைச் சேர்த்து லேசாகக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் மூடிவைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து தீயை அதிகப்படுத்தி, சிறிதளவு எண்ணெய்விட்டு அடிபிடிக்காமல் கிளறி இறக்கிப் பரிமாறவும்.