புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் அடைக்கல மாதா அன்னை கோவில் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
போட்டி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை சரிவர பின்பற்றவில்லை என்று போட்டி நடத்த தடை விதித்தார்.
இதனால் அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். பின்னர் பாரம்பரிய முறைப்படி அடைக்கல மாதா அன்னை கோவில் சார்பாக 15 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முயன்றனர்.
இந்த போட்டியில் 500 காளைகள் மற்றும் 235 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
வெற்றி பெறும் வீரர்களுக்குப் பாத்திரம், கட்டில், சைக்கிள், பைக் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வந்திதா பாண்டே தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் காவல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
புதுக்கோட்டை சம்பவம்: போராட்டத்தை அறிவித்த விசிக
அடுத்த மூன்று மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?