தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் 15 அரசு கல்லூரிகள், 9 தனியார் சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 5 ஆண்டுகள் சட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 2,004 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.
2023 – 24 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 15 முதல் ஜூன் 10 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 21,362 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதையடுத்து http://tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் தரவரிசைப் பட்டியல், கட் ஆஃப் மதிப்பெண் ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டன.
கடந்த ஜூன் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
ஜூன் 22, 23ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் 26ஆம் தேதி கல்லூரிகள் ஒதுக்கப்படும், 30 ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்ந்து விடலாம் என்றும் மாணவர்களுக்கு சட்ட பல்கலைக் கழகம் தெரிவித்தது.
ஆனால் ஆன்லைன் கலந்தாய்வு தேதியான நேற்றும் இன்றும் சட்டப் பல்கலை கழகத்தின் இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என்று கல்லூரியை தேர்வு செய்ய விண்ணப்பித்த மாணவர்கள் கூறுகின்றனர்.
https://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்துக்குள் சென்று LAW ADMISSION 2023 – 2024ஐ தேர்வு செய்தால், ’For Counselling 2023-24. Click Here’ என்று கேட்கிறது.
அதனை க்ளிக் செய்து சென்றால், விண்ணப்ப எண்ணும், பிறந்த தேதியும் கேட்கிறது.
அதில் மாணவர்கள், விண்ணப்ப எண்ணையும் பிறந்த தேதியையும் பதிவு செய்து, லாகின் கொடுத்தால் ’இது சரியான தகவல் இல்லை. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி பொருந்தவில்லை’ என்று காட்டுகிறது.
இதனால் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியாமல் குழப்பமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சட்ட கல்லூரியில் சேர விண்ணப்பித்த தேவக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில்,
“நேற்றிலிருந்தே இதுபோன்று தான் இணையதளம் வேலை செய்யவில்லை.
பல்கலைக் கழகம் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இன்று கலந்தாய்வுக்குக் கடைசி தேதி ஆகும்.
நான் இன்னும் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. சட்ட பல்கலையையும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்றார்.
நாங்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரியா