Pongal Special Market in Koyambedu
பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் கொத்துகள் அதிக அளவில் விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன. நேற்று நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது.
இதே போல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது.
இதனால் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது.
மார்க்கெட்டுக்கு வரும் சில்லறை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவியும் எனவும்,
மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் விற்பனை பொருட்களும் ஏராளமான வாகனங்களில் குவியும் என்றும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள அங்காடி நிர்வாகக் குழு அதிகாரி ஒருவர்,
“கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பொங்கல் பொருட்கள் அனைத்தையும் எளிதாக வாங்கி சென்றிடும் வகையில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடக்க உள்ளது.
காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிய பின்னர் மார்க்கெட் பின்புறம் உள்ள ‘ஏ’ சாலையில் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மார்க்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒலி பெருக்கி மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவலை தெரிவித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோயம்பேடு சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: அழகு சிகிச்சையில் டிரெண்டாகும் ‘ஐவி தெரபி’ எல்லாருக்கும் ஏற்றதா?
கிச்சன் கீர்த்தனா: ஈஸி சிக்கன் பிரியாணி!
Pongal Special Market in Koyambedu