சேலம் மாவட்டத்தில், ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை கடன்காரார் பிடித்து செல்வதாக மிரட்டியதால் கல்லூரி மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே வெள்ளக்கரட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல்ராஜ். இவர் காளிப்பட்டி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது தந்தை ஆனந்தன், உறவுக்காரர் சுதாகர் என்பவரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அதில் ரூ. 20 ஆயிரம் பணம் வட்டியுடன் திருப்பி கொடுத்துள்ளார்.
மீதமுள்ள ரூ. 20 ஆயிரம் திருப்பி கொடுக்காமல் நிலுவையில் இருந்ததால் நேற்று (ஆகஸ்ட் 16) சுதாகர் மற்றும் அவரது தாய் இருவரும் நிர்மல்ராஜ் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பணத்தை விரைவில் திருப்பி கொடுக்கவில்லை என்றால் வீட்டில் வளர்த்து வரும் ஆட்டுக்குட்டிகளை பிடித்து சென்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் பெற்றோரையும் தரக்குறைவாக பேசியுள்ளனர்.
அந்த ஆட்டுக்குட்டிகளை, நிர்மல்ராஜ் ஆசையாக வளர்த்து வந்துள்ளார். ஆட்டுக்குட்டியை பிடித்து சென்றுவிடுவேன் என்று கூறியதைக் கேட்ட நிர்மல்ராஜ் மனமுடைந்து வீட்டிற்குள் சென்று கதவுகளை அடைத்து விட்டு இரவு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் கதவு வெகுநேரமாக பூட்டி இருந்ததால் குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது நிர்மல்ராஜ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, நங்கவள்ளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் மாணவனின் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சுதாகர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா