தப்ப முயன்ற ரவுடி : போலீசார் துப்பாக்கிச் சூடு!

தமிழகம்

ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸ் மீது தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்ற ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிப் பிடித்தனர்.

சென்னை அடுத்த ராஜகோபால் கண்டிகை, எருமையூரை சேர்ந்த ரவுடி சச்சின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் இவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் ரவுடி சச்சின், ராஜகோபால் கண்டிகை அருகே உள்ள ஒரு கல்லூரியின் பின்புறம் நடுவீரப்பட்டு காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சோமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸ் குழு ரவுடியை பிடிக்கச் சென்றது.

அப்போது ரவுடி சச்சின், போலீஸ் குழுவிலிருந்த காவலர் பாஸ்கரை இடது தோள்பட்டையில் கத்தியைக் கொண்டு பலமாக வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார். உடனடியாக, ரவுடியை பிடிக்கக் காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், காலில் அடிபட்ட ரவுடியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கத்தியால் வெட்டுப்பட்ட காவலர் பாஸ்கர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த ரவுடி சச்சின் ஆகிய இருவரும் சிகிச்சைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ரவுடி சச்சின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் பாஸ்கரை காவல்துறையின் உயர் அதிகாரிகள் நேரில் சென்று நலம் விசாரித்து, மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டு வருகின்றனர்.

மோனிஷா

சினிமாவில் மொழி தடைகள் இல்லை : ஐஸ்வர்யா ராய்

நள்ளிரவு முதல் சென்னையில் மழை!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *